தோனி ஆடுவது வேலைக்கு ஆகாது..அவருக்கு பதில் இதை செய்யலாம் - விளாசிய ஹர்பஜன் சிங்!
சிஎஸ்கே வீரரான தோனி அவர்கள் 9வது நிலையில் விளையாடுவது குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
தோனி
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று தர்மசாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணி 9 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
இதனை சேஸ் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தொடர்ந்து ஆட்டமிழந்ததால் தோனி ஒன்பதாவது வரிசையில் பேட்டிங் இறங்கினார்.
அவருடைய டி20 கிரிக்கெட் வாழ்வில் இதுவரை மூன்றாம் வரிசையில் இருந்து எட்டாம் வரிசை வரை பேட்டிங் செய்துள்ளார். ஆனால் ஓய்வு பெறவுள்ள நிலையில், தற்போது அவர் ஒன்பதாவது வரிசையில் பேட்டிங் இறங்கி வருகிறார். அப்போது களத்தில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
ஹர்பஜன் சிங்
அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் தோனியின் ஆட்டமிழப்பு குறித்து பேசிய ஹர்பஜன் சிங், “9ம் நிலையில் தோனி இறங்குவதெல்லாம் சிஎஸ்கேவுக்கு வேலைக்கு ஆகாது. அணிக்கு இது உதவாது. அவருக்கு 42 வயதாகிறது ஆனாலும் நல்ல பார்மில் தான் இருக்கிறார். தோனி 4-5 ஓவர்களாவது ஆட வேண்டும்.
அவர் இதுவரை செய்ததை செய்து கொண்டிருக்க முடியாது, அவர் முன்னால் இறங்க வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்தார். மேலும் “9ம் நிலையில்தான் தோனி இறங்குவார் என்றால் அவர் தேவையில்லை. பிளேயிங் லெவனில் தோனிக்குப் பதில் ஒரு வேகப்பந்து வீச்சாளரைச் சேர்க்கலாம்.
தோனிதான் முடிவுகளை எடுப்பவர், ஆனால் அவரே 9ம் நிலையில் இறங்கி தன் அணியை கைவிடலாமா. தாக்கூர் அவருக்கு முன்னால் இறங்குகிறார். தாக்கூரால் தோனி போல் ஷாட்களை ஆட முடியாது. தோனி ஏன் இந்தத் தவறை தொடர்ந்து செய்து வருகிறார்? தோனியின் அனுமதியில்லாமல் எதுவும் அங்கு நடக்காது, ஆகவே அவர் இவ்வளவு பின்னால் இறங்குவது என்பது வேறொருவரின் ஆணைப்படி நடக்கிறது என்பதை நான் நம்ப மாட்டேன்” என்றார்.