சொதப்பும் ஹர்திக் பாண்டியா; பிசிசிஐ போட்ட கண்டிஷன் - வாய்ப்பை இழக்கும் அபாயம்!
டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவிற்கு பிசிசிஐ நிபந்தனைகளை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா
நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பாக நடை பெற்று வருகின்றது. இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கியுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியுள்ள, அவருக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதுவரை நடந்த 6 போட்டிகளில் மொத்தமாக, 131 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.
வெறும் 26.20 சராசரியுடன் அவரது பேட்டிங் உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை கடைசி 4 போட்டிகளிலும், சரியாக வீசவில்லை, அவர் விசிய ஒரு சில ஓவர்களிலும் ரன்களை வாரி வழங்கியுள்ளார். இச்சூழலில் விரைவில் டி-20 உலகக் கோப்பை தொடங்க உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு சில குறிப்பிட்ட நிபந்தனைகளை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ கண்டிஷன்
அந்த தகவல்களின்படி, கேப்டன் ரோகித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அப்போது ஹர்திக்கின் தேர்வு குறித்த விவாதத்தில் அவர் டி-20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவதற்கு தொடர்ந்து பந்துவீச வேண்டியது மிகவும் அவசியம் என்று நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை திறம்பட பந்துவீசாவ்ட்டால், அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகம் என்று தெரியவந்துள்ளது.
இந்த சீசனில் பேட்டிங்கில் சரியாக கவனம் செலுத்தாத ஹர்திக் பந்துவீச்சிலும் தனது மோசமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். பவர்பிளே பந்துவீச்சாளராக 4 ஓவர்களில் 44 ரன்களை கொடுத்துள்ளார். அதே நேரம் மிடில் ஓவரில், 6 ஓவர்களில் 62 ரன்களும், டெத் பவுலராக ஒரு ஓவர் வீசி 26 ரன்களை வழங்கியுள்ளார்.