மனைவி மீது இருந்த பயம்; வங்கியில் கொள்ளைடித்த நபர் - பகீர் காரணம்
மனைவி மீது இருந்த பயத்தில் ஒரு நபர் வங்கியில் ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்துள்ளார்.
வங்கி கொள்ளை
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி பகுதியில் பெடரல் வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கிக்கு வெள்ளிக்கிழமை(14.02.2025) மதியம் 2.15 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
ஹெல்மெட் அணிந்து கத்தியுடன் வந்த அவர், வங்கியில் இருந்த ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி கழிப்பறையில் அடைத்துள்ளார். உடனே வங்கியில் இருந்த ரூ.15 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரில் தப்பியுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள மனைவி
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரிஜோ ஆண்டனியை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், வங்கிக்கு எதிராக உள்ள தேவாலயம் முன் இருந்து, 2 வாரங்கள் வங்கி நடவடிக்கைகளை கண்காணித்து வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும் நேரத்தை கண்டறிந்துள்ளார்.
அதற்காக போலிநம்பர் பிளேட்டை தனது ஸ்கூட்டரில் பொறுத்தியுள்ளார். கொள்ளை நடந்ததற்குப் பிறகும் அதே ஸ்கூட்டரில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளதை சிசிடிவி மூலம் கண்டறிந்துள்ளனர். அந்த குறிப்பிட்ட பிராண்ட் ஸ்கூட்டரைப் பயன்படுத்துபவர்களைத் தேடி குற்றவாளியை கண்டறிந்துள்ளனர்.
வெளிநாட்டில் செவிலியராக பணியாற்றி வரும் அவரது மனைவி அனுப்பிய பணத்தை எல்லாம் ரிஜோ ஆண்டனி ஆடம்பரமாக செலவழித்து ரூ.10 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி அடுத்த மாதம் வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வர உள்ளதால், அதற்குள் கடனை அடைப்பதற்காக வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.