பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை? உயர்நீதிமன்றத்தில் மனு!
பிரபாகரன் படத்தை சீமான் பொது வெளியில் பயன்படுத்த தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீமானுக்கு தடை?
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே சார்லஸ் அலெக்சாண்டர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "சி.பா. ஆதித்தனாரால் நாம் தமிழர் கட்சி கடந்த 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின், திரைப்பட இயக்குநர் சீமான் 2010-ம் ஆண்டு முதல் தலைமை ஒருங்கிணைப்பாளராக நாம் தமிழர் கட்சியை நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்தம் நடைபெற்ற இறுதி கால கட்டத்தில், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தாம் போர் முனையில் நேரில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது ஏ.கே 47 ரக துப்பாக்கியில் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் சீமான் பொது மேடைகளில் பேசி வருகிறார்.
நீதிமன்றத்தில் மனு
விடுதலை புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதித்திருக்கும்போது, அனைத்து தேர்தல் பிரசாரங்களிலும், பிரபாகரனின் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார். மேலும், பிரபாகரனுடன் தாம் இருப்பது போலவும்,
ஏ.கே 47 துப்பாக்கி வைத்திருப்பது போலவும் மார்பிங் செய்து அந்த படங்களை பயன்படுத்தி வருகிறார் என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய- மாநில அரசுகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால், பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.