ரூ.500 நோட்டுகளை உடனே தடை செய்யணும் - முதலமைச்சர் திட்டவட்டம்
ஊழலை ஒழிக்கப் பெரிய கரன்சி நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு
பிரபல ஆங்கில ஊடகத்திற்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், "ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும்.
ரூ.500 நோட்டுகள் கூட தொடரக்கூடாது. அனைத்து பெரிய கரன்சி நோட்டுகளையும் ஒழித்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்றார். தொடர்ந்து இலவசமாக அரசு வழங்கும் பொருட்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,
என்னைப் பொறுத்தவரை அதை இலவசம் எனச் சொல்வதே சரியானது இல்லை. முன்பு அரசு அதிக நலத்திட்டங்கள் வழங்காது. என்.டி. ராமராவ் காலத்தில் தான் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டது. அப்படித்தான் நலத்திட்டங்கள் தொடங்கின. இப்போது செல்வம் உருவாக்கப்படுகிறது.
முதல்வர் கருத்து
அதேநேரம் வசதி படைத்தவர்களுக்கும், வசதி இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நலத்திட்டங்கள் அர்த்தமுள்ளதாகவும், சரியான நபர்களுக்குச் சென்று சேர்வதும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் சாதி வாரிக் கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு, நாடு முழுக்க சாதி வாரிக் கணக்கெடுப்பு, திறன் கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு என மூன்றையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். டேட்டா மிகவும் சக்தி வாய்ந்தது. அதை வைத்துப் பல நலத்திட்டங்களை உருவாக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.