எதிரணி செய்த செயல்..என்னை கடத்தி சென்று கையை வெட்டுவதாக மிரட்டினர் - அஸ்வின்!
சிறுவனாக இருந்தபோது எதிரணி தன்னை கடத்தி சென்று மிரட்டியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்த பேட்டி ஒன்றில், சிறுவயதில் தனக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, எனக்கு ஒரு 14, 15 வயது இருக்கும் என நினைக்கிறேன். அப்போது டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன்.
என்னுடைய அப்பாவுக்கு நான் டென்னிஸ் பந்துகளில் கிரிக்கெட் ஆடுவது சுத்தமாக பிடிக்காது. அதேபோல் தெருக்களிலும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்பார். இருந்தாலும் நான் என் நண்பர்களோடு சேர்ந்து டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடுவேன். ஒருநாள் எங்கள் டீம் இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது.
அப்போது, எங்கள் அணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர் டீம் பிளேயர்கள் என்னை விளையாட வரக்கூடாது என மிரட்டினார்கள். இறுதிப் போட்டியில் விளையாடினால் கை துண்டாக்கிவிடுவேன் என்றும் மிரட்டினார்கள். அந்த நாள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
கடத்தி சென்று..
காலையில் வீட்டுக்கு ஒரு பைக்கில் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் மேட்ச் விளையாட அழைத்து சென்றார்கள். நானும் அவர்களோடு சென்றுவிட்டேன். திடீரென அவர்கள் ஒரு கடையில் வண்டியை நிறுத்தி இட்லி - வடை எல்லாம் வாங்கி கொடுத்தார்கள்.
நானும் சாப்பிட்டுவிட்டு, மேட்சுக்கு டைம் ஆச்சு போலாம் என்றேன். ஆனால் அப்போது தான் அவர்களுடைய பிளான் தெரிந்தது. நீ விளையாட போகக்கூடாது என மிரட்டி அங்கேயே இருக்க வைத்துவிட்டனர்.
பின்னர் நானும் வீட்டுக்கு சென்றுவிட்டேன். முதலில் இதுகுறித்து பயந்து என் அப்பாவிடம் சொல்லவில்லை. அவர் திரும்ப திரும்ப கேட்டதால் உண்மையை சொல்லிவிட்டேன். என்றார்.