பாலியல் வன்கொடுமைக்கு பின் கொல்லப்படுவது இதனால்தான்.. ராஜஸ்தான் முதல்வர் சர்ச்சை பேச்சு!
பாலியல் வன்கொடுமை செய்து விட்டு கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
அசோக் கெலாட்
டெல்லியில் விலை வாசி உயர்வு ,வேலை வாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அசோக் கெலாட் கூறியதாவது, டெல்லியில் நடைபெற்ற நிர்பயா வழக்குக்குப் பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது. இதை ஏற்று பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.
பாலியல் வன்கொடுமை
அப்போது இருந்தே பாலியல் வன்கொடுமை செய்து பெண்களை கொலை செய்து விடும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் நிலவும் மிகவும் ஆபத்தான போக்காக இது உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் நமக்கு எதிராக சாட்சியம் அளித்து விடுவார் என பயந்துபோய் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர், பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணை கொன்று விடுவதே சரி என கொலை செய்து விடுகிறான்.
கண்டனம்
இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. இது மிகவும் ஆபத்தான போக்காகும். நாட்டில் நிலவும் இந்த நிலை நல்லதல்ல" என கூறினார். இந்த கருத்து தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.
இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேரும் கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.