இலாகா மாற்ற முதல்வருக்கே அதிகாரம்; கவர்னர் கூற சட்டம் இல்லை - அப்பாவு காட்டம்
இலாகாவை மாற்ற முதல்வருக்கே அதிகாரம் இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு
அழகப்புரம் பகுதியில் இருந்து ராதாபுரம் கால்வாய் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார். அவர் தனக்கு வேண்டிய யாரையும் அமைச்சராக்கலாம். முதலமைச்சரின் முடிவிற்குள் யாரும் தலையிடக்கூடாது என்பது மரபு. யாருக்கு எந்த துறை கொடுக்க வேண்டும் என்பதும் முதலமைச்சரின் விருப்பம்.
சட்டம் இல்லை
செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது என்று கவர்னர் கூறுவதற்கு எந்த சட்டமும் இல்லை. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்கவில்லை. முதலமைச்சரின் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்த்திருக்கலாம்.
தமிழகத்தின் கோவிலாக இருக்கும் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து, அமலாக்கத்துறை ஜனநாயக மாண்பை மீறி விட்டார்கள். பாராளுமன்றத்தை போன்று உயர் மதிப்பு, தமிழக சட்டப்பேரவைக்கும், தலைமை செயலகத்திற்கும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.