2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீரா - ஸ்டாலினை சாடிய அண்ணாமலை
ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலினை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ரயில் கட்டண உயர்வு
ரயில்களில் வரும் ஜூலை 1 முதல் கட்டணம் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும்,
ஏசி வசதி இல்லாத மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா வீதமும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம், நடுத்தர குடும்பங்களின் கவலையை மேலும் அதிகரிக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தினார்.
சாடிய அண்ணாமலை
இந்நிலையில் இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், தொலைதூர ரயில்களில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா மற்றும் குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா என, மிகக் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 500 கிலோ மீட்டருக்கு அதிகமான பயணங்களுக்கு கிலோ மீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் மட்டுமே உயர்வு இருப்பதாகத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், பால் விலை, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்துத் துறைகளிலும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு,
1 பைசா, 2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் பண்டிகை நாட்களில், தனியார் பேருந்துகளில் பல ஆயிரங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர், மிக மிகச் சொற்பமான ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்' எனக் குறிப்பிட்டுள்ளார்.