பெண் காவலரை தாக்கியவருக்கு முதல்வர் வரவேற்பு அளிப்பதா? அண்ணாமலை கேள்வி
குற்றவாளிகள் திமுகவின் நிழலில் இருப்பதால்தான் சிறிதும் பயமின்றி உலாவுவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
முதல்வர் பிறந்தநாள்
இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாடு முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலன்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க பரிசு பொருட்களுடன் திமுக தொண்டர்கள் வருகை தந்தனர்.
சிங்கம் பரிசு
அதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுக உறுப்பினரான ஸ்ரீதரன் என்பவர் பெரிய சிங்கத்தின் சிலையை பரிசாக வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு முதலமைச்சர் வரவேற்புபசாரம் அளிப்பதா என விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவண்ணாமலை ஆலயத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை, கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியதோடு, அது தொடர்பான வழக்கில் தலைமறைவாகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன் என்ற நபர், தற்போது முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கிறார். அதனை முதலமைச்சரும் சிரித்துக் கொண்டே பெற்றுக் கொள்கிறார்.
பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரை, காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் வரவேற்புபசாரம் அளிப்பது, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் என்ன வகையான செய்தியை வெளிப்படுத்துகிறது என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறாரா?
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவண்ணாமலை ஆலயத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை, கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியதோடு, அது தொடர்பான வழக்கில் தலைமறைவாகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன் என்ற… pic.twitter.com/GRcHtR3R09
— K.Annamalai (@annamalai_k) March 1, 2025
தமிழகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், குற்றவாளிகள் சிறிதும் பயமின்றி உலாவுவதும், திமுகவின் நிழலில் இருப்பதால்தான் என்பதற்கு இன்னும் என்ன உதாரணம் வேண்டும்?" என தெரிவித்துள்ளார்.