இனி பிரதமரை அப்படி அழைத்தால்..நான் உதயநிதியை வேறமாறி அழைப்பேன் அண்ணாமலை அதிரடி!
29 பைசா பிரதமர் என்று அழைத்தால், கஞ்சா உதயநிதி என அழைக்க வேண்டி இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசியுள்ளார்.
வேறமாறி அழைப்பேன்
தமிழிநாட்டில் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல பகுதிகளில் தீயாய் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது, தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் வரி செலுத்தினால் அதற்கு பதிலாக மத்திய அரசு 29 பைசா மட்டுமே திரும்ப தருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனால் பிரதமரை 29 பைசா பிரதமர் என கடுமையாக விமரிசித்து வருகிறார்.
இந்நிலையில், திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து கவுந்தம்பாடியில் பிரச்சாரம் பெற்றுக்கொள்ளும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உதயநிதியின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்தார்.
அவர் பேசுகையில், ”பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி 29 பைசா பிரதமர் என தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அண்ணாமலை அதிரடி
அப்படி அவர் இனியும் விமர்சித்தால் அவரை கஞ்சா உதயநிதி என நாங்கள் அழைக்கலாமா? தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் போதை பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது.
இதைத் தடுக்க மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று சாடியுள்ளார். பிறகு நடைபெற்ற செய்தியாளார்கள் சந்திப்பில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாமலை குறித்து முன் வைக்கும் விமர்சனங்களை பற்றி கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், ”செல்லூர் ராஜு வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வந்தால் அன்று மழை வந்துவிடும். அவர் எப்போது நல்ல வார்த்தைகளை பேசி உள்ளார்? நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடி விவாதத்திற்கு தயாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
முதலில், நாங்கள் ஏன் அவருடன் விவாதம் நடத்த வேண்டும்?
நாங்கள் எங்கள் மேடையில் இருந்து பிரச்சாரம் செய்கிறோம். அவர் அவரது மேடையில் இருந்து பிரச்சாரம் செய்யட்டும். பாஜகவிற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே போட்டியே இல்லை. அவருடன் நாங்கள் ஏன் விவாதம் செய்ய வேண்டும்?” என்று தெரிவித்துள்ளார்.