துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான் - எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவிற்கு பரமக்குடிக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் மதுரை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறை மீது ரவுடிகளுக்கு அச்சம் இல்லை. அண்மை காலமாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சித்தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி மர்மமான முறையில் இறந்தார். அந்த குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. அதன்பிறகு சேலம் மாநகர முன்னாள் மண்டலக்குழுத் தலைவர் சண்முகம், திமுக கட்சியினரால் ஏவப்பட்ட கூலிப்படையால் கொடூரமாக கொல்லப்பட்டார். தற்போது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார். பொது மக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பாதுகாப்பான சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்பதை இது போன்ற சம்பவங்கள் காட்டுகிறது.
ஓபிஎஸ்
தேர்தல் சுதந்திரமாக நடக்க வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி வாக்களிக்க கூறக்கூடாது. ஆனால் வாக்காளர்களை கொடுமைப்படுத்திதான் தற்போது விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா 5 முறை தேர்தலை புறக்கணித்துள்ளார். அது போன்று தான் விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்துள்ளோம்.
ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்ததே கிடையாது. ராமநாதபுரத்தில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டவர் ஓபிஎஸ். கட்சியைப் பற்றி கவலைப்படாமல் தனது மகனைப் பற்றி மட்டும் கவலைப்பட்டவர் ஓபிஎஸ். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கட்சி அலுவலகத்தை சூறையாடினார்.
அண்ணாமலை
அண்ணாமலை என்னை துரோகி என பேசியுள்ளார். நான் துரோகி கிடையாது. துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான். எங்கள் கட்சியின் பெயரிலே அண்ணா பெயர் உள்ளது. எங்கள் கட்சி முன்னோடி தலைவர்களைகீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்.
நாங்கள் 50 ஆண்டுகள் கடுமையாக உழைத்து படிப்படியாக இந்த பதிவிற்கு வந்துளோம். அதிமுக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அண்ணாமலை போன்ற நியமன தலைவர் கிடையாது. முதலில், அரசியல் தலைவர் எப்படி பேச வேண்டும் என கற்றுக் கொள்ள வேண்டும்." என பேசியுள்ளார்.