பொய் புகார்; பெண் அதிகாரியை கடுமையாக தாக்கிய திமுக நிர்வாகி - கொதித்த அண்ணாமலை!
பொய் புகார் அளிக்க மறுத்த பெண் அதிகாரி மீது கொடூர தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொய் புகார்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிறைவடைந்ததது. அப்போது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் ஈடுபட்டு இருந்தனர்.
அவ்வப்போது தலைவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக புகார்கள் எழுந்தன. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் அருகில் உள்ள கிராமத்தில் இருந்த பெண் விஏஓ மீது கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று, திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி என்ற நபர், பெண் கிராம நிர்வாக அலுவலர், சகோதரி திருமதி சாந்தி அவர்களை, கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது மிருகத்தனமானது.
அண்ணாமலை
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாட்டாளி மக்கள் கட்சி சகோதரர்கள், தேர்தல் பிரச்சார விதிகளை மீறியதாகப் பொய்ப் புகார் அளிக்க மறுத்ததால், அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நாளன்று, இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறார் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி.
ஆட்சிக்கு வரும் முன்னர், தெருத் தெருவாகச் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, தனது கட்சியினரைச் சிறிய அளவில் கூட கண்டிக்காதது தான், அரசு அதிகாரிகளுக்கு, குறிப்பாக, பெண் அதிகாரிகளுக்கு எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம்.
பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்துத் தாக்கிய திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.