இது தான் அந்த பல்கலைக்கழகம், செங்கல்லை எடுத்து காட்டிய அண்ணாமலை - பொதுக்கூட்டத்தில் ஆவேசம்!
நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை திமுக குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
பொதுக்கூட்டம்
நாகர்கோவில் நாகராஜா திடலில், மத்திய பா.ஜ.க அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு திமுக தேர்தல் பொழுதில் அளித்த வாக்குறுதிகளை பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், ''மீனவர்களுக்கு திமுக அரசு என்ன செய்திருக்கிறார்கள் என சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டுவோம் என்றார்கள். கட்டினார்களா" என்று கூறி செங்கல் ஒன்றை தூக்கி "இதுதான் அந்த இரண்டு லட்சம் வீடு. திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் அவர்கள் கட்டிக் கொடுப்பதாக சொன்ன ஒரு வீடு கூட தமிழகத்தில் இல்லை. அதனால் தான் இந்த செங்கல்" என்று கூறினார்.
அண்ணாமலை பேச்சு
இந்நிலையில், அவர் தொடர்ந்து பேசுகையில், "511 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளீர்கள் கன்னியாகுமரிக்கு ஒண்ணுமே நிறைவேற்றவில்லை என்று கேட்டால் எய்ம்ஸ் எங்கே என்று கேட்பார்கள். நமது பொன் ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரி சபையில் இருக்கும் பொழுது அவர் கொண்டு வந்தது ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்.
அதுவும் குறிப்பாக பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும் பிரதமர் மோடி அவர்களும் சாதாரண எய்ம்ஸை கட்டுவதற்கு இங்கே விரும்பவில்லை. இந்தியாவில் நிறைய எம்ஸ்களை அரசு கட்டியுள்ளது. சின்ன சின்ன எய்ம்ஸ் கட்டி இருக்கிறோம். 200 பெட், 300 பெட் இருக்க எய்ம்ஸ் கட்டி இருக்கிறோம்" என்று கூறினார்.
மேலும் அவர், " உங்கள் தேர்தல் வாக்குறுதியில் அதே மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஒரு வாக்குறுதி கொடுத்தீர்கள். ஒருவேளை நீங்கள் மறந்திருந்தீர்களா. உங்கள் வாக்குறுதி எண் 54. அந்த வேளாண் கழகம் எங்கு இருக்கிறது என்றால் என 'அக்ரி யுனிவர்சிட்டி" என எழுதிய செங்கலை மீண்டும் அண்ணாமலை எடுத்துக்காட்டினார்.