ஸ்டாலினுக்கு ரோடு ஷோ நடத்த பயம்?அப்படி நடந்தா மக்களுக்கு தெரிஞ்சிரும்- அண்ணாமலை பேச்சு!
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரைப்போல் ரோடு ஷோ நடத்த முக ஸ்டாலினுக்கு பயமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வந்து பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அவர் வரும்போதெல்லாம் ரோடு ஷோ நடத்தி மக்களிடையே வாக்கு சேகரிக்கிறார். மோடி அடிக்கடி தமிழகம் வருவது குறித்து திமுகவினர் பலமுறை விமர்சித்துள்ளனர். எத்தனை முறை பிரதமர் தமிழகம் வந்தாலும், ரோடு ஷோ நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்று சாடியுள்ளனர்.
ஸ்டாலினுக்கு பயம்
இந்த நிலையில், கோவையில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோரைப் போல ரோடு ஷோ நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுவது ஏன்? முதலமைச்சர் ரோடு ஷோ நடத்தினால் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்து விடும்" என்று கூறியுள்ளார்.
மேலும், நாம் தமிழர் கட்சி சின்னம் விவகாரம் குறித்தும், அதற்கு பாஜக தான் காரணம் என்று சீமான் குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த அவர், "சரியான நேரத்தில் சின்னத்தை விண்ணப்பித்து கேட்டு பெறாததால் நாம் தமிழர் கட்சியினர் அவர் மீது கோபமாக இருக்கிறார்கள். தன் மீதான தவறை மறைக்க தினம் ஒரு வார்த்தையை, தினம் ஒரு தத்துவம் என சீமான் பேசிக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.