ஆந்திராவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த போதே பிரிந்த இளைஞரின் உயிர்
வெண்ணிலா கபடி குழு படத்தில் வருவது போல கபடி விளையாடி கொண்டிருக்கும்போது ஒரு விளையாட்டு வீரரின் உயிர் சென்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கங்கன்ன பள்ளியில் நேற்று மாவட்ட அளவில் ஆன கபடி போட்டி நடைபெற்றது.
போட்டியில் அதே பகுதியை சேர்ந்த எம்.கம்பட்டதாரி நரேந்திராவும் தன்னுடைய அணியினருடன் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது கபடி ஆடிய அவரை மடக்கி பிடித்த எதிரணியினர் அவர் மேல் விழுந்தனர். சற்றுநேரத்தில் அவரிடமிருந்து வந்த கபடி, கபடி என்ற சத்தம் நின்று போனது.
அப்போது அங்கிருந்து எழுந்து நரேந்திரா சுமார் இரண்டடி தூரம் நடந்து மயங்கி சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். அவரை அங்கிருந்து அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நரேந்திரா உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவித்தனர் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது