3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு
ராமதாஸ் மீது விசிக, காங்கிரஸுக்கு திடீர் பாசம் ஏன் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமதாஸ் - அன்புமணி மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக கட்சில மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.
அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தானே தலைவர் என அறிவித்தார்.
இதை தொடர்ந்து இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்குவது, புதிய பொறுப்பாளரை நியமிப்பது,தனிதனியாக ஆலோசனை கூட்டம் நடத்துவது என தனி தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பாமக சமூக ஊடக பேரவை கூட்டத்தில் அன்புமணி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
திமுகவின் சூழ்ச்சி
இதில் பேசிய அவர், "விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் வந்தது ஏன்? என்றைக்காவது ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார்? செல்வப்பெருந்தகை ராமதாஸை சந்தித்தது ஏன்?
எல்லாம் திமுகவின் சூழ்ச்சி. திமுக தான் பாமகவுக்கு எதிரி. திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை. வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தை போல் மாறிவிட்டார். அதனால் அவரை யாரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்ய வேண்டாம்.
3 பேர்
அவருடன் இருக்கும் 3 பேர் தங்கள் சுய லாபத்துக்காக, அவரை பயன்படுத்தி கொள்கின்றனர். அது தெரிந்த பிறகுதான் நான் தலைவராக ஒப்புக்கொண்டேன். கட்சியில் முழு அதிகாரம் எனக்கு தான். 99 சதவீத கட்சியினரும் நம்முடன்தான் உள்ளனர்.
ராமதாஸ் பேட்டியில் பேசுவது அத்தனையும் பொய். அவர் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி பேசினேன். இப்போது இல்லை என மறுக்கிறார். அவர் சொல்லி இருந்தால் அதிமுகவுடன் பேசி இருப்பேன்.
வீட்டுக்கு வந்த மருமகளை யாராவது பொது வெளியில் விமர்சனம் செய்வார்களா? உங்கள் மனைவியை யாராவது திட்டினால் உங்களுக்கு கோபம் வராதா? ராமதாஸ் முன்பு போல் இல்லை. அப்படி இருந்திருந்தால், இப்படி பேசி இருப்பாரா?
கடந்த 2 மாதங்களாக கட்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், செய்திகள் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. தினமும் நிம்மதி இல்லாமல், தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என பேசியுள்ளார்.