ரேஷன் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் தமிழக அரசு - இந்த 10 மாவட்டங்களில் அறிமுகம்
ரேஷன் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம் சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும், 2.25 கோடி கார்டுதாரர்கள் உள்ள நிலையில், கார்டில் உள்ள உறுப்பினர்கள், நியாய விலைக்கடைக்கு நேரில் சென்று கைரேகையை பதிவு செய்து, பொருட்களை வாங்கும் நடைமுறை தற்போது உள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேரில் சென்று ரேஷன் பொருட்களை பெறுவதற்கு சிரமப்பட்டனர்.
இதனை கருத்தில் கொண்டு, ரேஷன் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.
10 மாவட்டங்கள்
இந்நிலையில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில், மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக, சென்னை, கடலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
ஜூலை 1 முதல் ஜூலை 5 வரை இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சோதனைக்கு பின்னர், சுதந்திர தினம் அல்லது செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாளில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும்.