மோடி ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டே இல்லை - அமித்ஷா பெருமிதம்
2047க்குள் இந்தியா உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உருவாகும் என அமித்ஷா பேசியுள்ளார்.
அமித்ஷா
டெல்லியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பு சார்பில் நடைபெற்ற வருடாந்திர நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் பேசிய அவர், "குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளால் 2047 க்குள், இந்தியா உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உருவாகும்" என பேசியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு
மேலும், "நாங்கள் நாட்டில் சீர்திருத்தங்களையும் பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளோம் . இந்த காலகட்டத்தில், எங்கள் அரசாங்கத்தின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட சுமத்தப்படவில்லை. இதை எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டன.
10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா இரட்டை இலக்க பணவீக்க நாடாக இருந்தது, ஆனால் தற்போது இரட்டை இலக்க வளர்ச்சி கொண்ட நாடாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கு கிளர்ச்சியை மோடி அரசாங்கம் பூமியில் புதைத்துவிட்டது.
மோடி அரசாங்கம் 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது. 50 மில்லியன் மக்களுக்கு இலவச வீடுகளும், 110 மில்லியன் மக்களுக்கு இலவச மின்சார இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 120 மில்லியன் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன" என பேசியுள்ளார்.