கடந்த 3 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தொகுதியை விட பாஜக அதிக வெற்றி - அமித்ஷா பெருமிதம்!
இந்தியா கூட்டணியினர் ஆணவத்தை காட்டி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அமித்ஷா
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது "ஜார்க்கண்டில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில் 52 தொகுதிகளில் ஏற்கனவே தாமரை மலர்ந்துள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
பாஜக அதிக வெற்றி
ஆட்சி அமைத்த பிறகு பழங்குடியின மக்களின் நிலங்கள், இட ஒதுக்கீடு மற்றும் மக்கள் தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்கமுடியாமல் ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணியினர் ஆணவத்தை காட்டி வருகின்றனர்.
கடந்த 2014, 2019, 2024-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் மொத்தமாக காங்கிரஸ் வெற்றி பெற்றதை விட, இந்த தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளது.