இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அகற்றப்படும் - அமித் ஷாவின் சர்ச்சை வாக்குறுதி!
இஸ்லாமியருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்' என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமித் ஷா
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்கவிருக்கும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதற்கிடையில் அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கானாவில் மேடக் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டினார். “தெலங்கானாவில் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இங்கு ஊழலில் மூழ்கியுள்ளன.
இடஒதுக்கீடு
காளேஸ்வரம் ஊழல் முதல் நிலமோசடி வரை டிஆர்எஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை, காங்கிரஸ் கட்சி விசாரிக்கவில்லை. டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இரண்டும் கைகோத்து மக்களை ஏமாற்றுகின்றன. மூன்றாவது முறையாக மோடியை தேர்ந்தெடுங்கள் அவர் தெலங்கானாவை ஊழலில் இருந்து விடுவிப்பார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தெலங்கானாவின் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு அப்பால் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியையும் அமித் ஷா தாக்கினார். "காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகள் மஜ்லிஸுக்கு பயந்து தெலங்கானா விடுதலை தினத்தை கொண்டாடவே இல்லை.
பாஜக மஜ்லிஸுக்கு அஞ்சாததால் தெலங்கானா விடுதலை தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமல்ல காங்கிரஸ் மற்றும் டிஆர்எஸ் நீட்டித்த முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது என்றார்.