ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் நிலைமை வரும் - அமித் ஷா பேச்சு
ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
புத்தக வெளியீடு
டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஸ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,
``இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சூழல் வருவதற்கு இன்னும் வெகுகாலம் ஆகாது. உறுதியானவர்களால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் நகைகள் என்று நம்புகிறேன்.
அமித் ஷா பேச்சு
நமது மொழிகள் இல்லாமல், நாம் உண்மையிலேயே இந்தியராக இருப்பதில்லை. நமது நாடு, நமது கலாச்சாரம், நமது வரலாறு, நமது மதத்தைப் புரிந்து கொள்ள, எந்த வெளிநாட்டு மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான வெளிநாட்டு மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்ய முடியாது.
மீண்டும் ஒருமுறை, சுயமரியாதையுடன், நமது சொந்த மொழிகளில் நமது நாட்டையும், உலகையும் வழிநடத்துவோம். தற்போதைய நடைமுறைகள் இன்னும் காலனித்துவ கால சிந்தனையை பிரதிபலிக்கின்றன. இலக்கியம் சமூகத்தின் ஆன்மா. நமது நாடு இருள் சூழ்ந்த காலத்தில், இலக்கியம் நமது மதம், சுதந்திரம் மற்றும் கலாச்சாரத்தின் விளக்குகளை ஏற்றி வைத்திருந்தது.
அரசாங்கம் மாறியபோதும், யாரும் அதை எதிர்க்கவில்லை. ஆனால் யாராவது நமது மதம், கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தைத் தொட முயற்சிக்கும்போதெல்லாம், நமது சமூகம் அவர்களை எதிர்த்து நின்று அவர்களைத் தோற்கடித்தது. இலக்கியம் நமது சமூகத்தின் ஆன்மா" எனத் தெரிவித்துள்ளார்.