விஜய் கட்சியில் இணைய உள்ள அமீர்? அவரே சொன்ன பதில்
அரசியலில் பயணிப்பது குறித்து இயக்குனர் அமீர் பேசியுள்ளார்.
அமீர்
திருச்சியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் பற்றிய படம் அதிக அளவில் வருகிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால் திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க இயலாது என்றார்.
ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த வழக்கை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. நீதிமன்றத்தில் நீதியரசர் விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்தது. ஆகையால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மற்றபடி எனக்கு இந்த வழக்கை பற்றி எதுவும் தெரியாது என பதிலளித்தார்.
திராவிட கட்சி
மேலும், மத்திய அரசின் நிலைப்பாடு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இருந்து தெளிவாக தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டை புறக்கணித்தார்கள் என்பதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தது தான் மேலும் வேதனை அளிக்கிறது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்க வேண்டும்' என்றார்.
அரசியலுக்கு வந்தால் திராவிட கட்சியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு, திராவிடம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்தால் மட்டுமே திராவிடம் வேண்டும், வேண்டாம் என்று தெரியவரும். ஆரியத்திற்கு எதிரான சொல் தான் திராவிடம் ஆகும். திராவிடம் என்பது நம்முடைய மண், ரத்தம் உணர்வுகளில் கலந்து இருப்பது.
ஆகையால் அனைவரும் திராவிடர்கள் தான், திராவிட சிந்தனைகள் உள்ளவர்கள் தான். பாசிச அரசியலுக்கு எதிராக யாரெல்லாம் அரசியல் செய்கிறார்களோ அது திராவிட அரசியலாகும். பாசிசதிற்கும், ஆரியத்திற்கும் எதிராக செய்யக்கூடிய அரசியல் திராவிட அரசியல் எனப்படும். என கூறினார்.
விஜய் கட்சி
சட்ட ஒழுங்கு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சரியாகத் தான் உள்ளது. சட்ட ஒழுங்கு எல்லா காலத்திலும் சரி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்ட ஒழுங்கைப் பற்றி மட்டுமே கூற முடியும். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என பேசுவது ஒரு அரசியலாகும்.
அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அது தான் எனக்கு உள்ளுணர்வு சொல்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் நான் செல்வேன். விஜய் உடன் சீமான் இணைந்து செயல்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என பதில் அளித்தார்.