ஜாமீன் வங்கியும் சிறையில் அடைக்கப்படும் அமர் பிரசாத் ரெட்டி!! காரணம் தெரியுமா..?
பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவில் தென்காசி அம்பை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கொடி கம்பம் அகற்றம்
சென்னை பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகில் 50 அடி உயரம் கொண்ட பாஜகவின் கொடி கம்பம் அமைந்திருந்தது. இந்த கொடிக்கம்பத்திற்கு எதிராக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
நெடுஞ்சாலை துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த கொடி கம்பம் அமைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த கொடிக்கம்பம் கடந்த சில நாட்கள் முன்பு அகற்றப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை போலீசார் வரவழைத்த நிலையில், ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அவ்வாகனத்தின் கண்ணாடியை உடைத்தாக கூறப்படுகிறது.
புழல் சிறையில் அமர் பிரசாத் ரெட்டி
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதாக பாஜகவை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.
அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டுக்கே சென்று கைது செய்த காவல் துறையினர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். அதனை தொடர்ந்து, வரும் நவம்பர் 3ஆம் தேதி வரை அமர் பிரசாத் ரெட்டியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வர்ஷா உத்தரவிட்டார்.
அதன்படி அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறையில் காவலில் வைக்கப்படிருந்தார். அவரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை செங்கல்பட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜாமீன் வாங்கியும் சிறை
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திலும் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை தென்காசியில் நடைபெற்ற போது, போலீசாருடன் தகராறில் ஈடுபட்டது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது என அமர் பிரசாத் ரெட்டி மீது அங்கு 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் காவல் துறையினர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர்.
அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டியை காவல் துறையினர் ஆஜர்படுத்துவதற்காக அவர் அம்பாசமுத்திரத்திற்கு கோயம்பேட்டில் இருந்து தென்காசிக்கு அரசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமர் பிரசாத் ரெட்டிக்கு அம்பை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. போலீசாரை பணி செய்ய விடாமல் தகராறு செய்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் மற்ற வழக்குகளில் நீதிமன்றக் காவலில் இருப்பதால் மீண்டும் இன்றே புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்படலாம் என கூறப்படுகிறது.