மேலாடையில்லாமல் மசாஜ் செய்தபடி மீட்டிங்கில் ஏர் ஏசியா விமான நிறுவன CEO - அவர் கொடுத்த விளக்கம்?
மேல்சட்டையில்லாமல் மசாஜ் செய்தபடியே மீட்டிங் நடத்திய விமான நிறுவன CEO, சர்ச்சையான பின் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
மேல்சட்டையில்லாமல் மீட்டிங்
பிரபல விமான நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஏர் ஏசியா (Air Asia). இந்த நிறுவனம் மலேசியாவின் கோலாலம்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) செயல்பட்டு வரும் டோனி பெர்னாண்டஸ் அண்மையில் மேல்சட்டையில்லாமல், நாற்காலியில் அமர்ந்து மசாஜ் செய்து கொண்டே ஆன்லைன் மீட்டிங்கில் பங்கேற்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் அவருக்கு பெண் ஒருவர் மசாஜ் செய்து விடுவது பதிவாகியிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, பலரும் இதற்கு கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.
விளக்கம்
இந்நிலையில் இது தொடர்பாக லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் டோனி பெர்னான்டஸ் வெளியிட்டுள்ள பதிவில் "ஒரு வார பணிகள், மன அழுத்தத்தை ஏற்படுத்தின. அப்போதுதான், வெரோனிட்டா ’மசாஜ் செய்யலாம்’ என பரிந்துரை செய்தார்.
அதன்படி, நான் மசாஜ் செய்துகொண்டே நிர்வாகக் கூட்டத்தை நடத்தினேன். ஏர் ஆசியா முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. எங்களுக்கான மூலதனத்தை இறுதி செய்துள்ளோம். இதுவரை நாங்கள் செய்துள்ள பணிக்காகப் பெருமை கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.