அதிமுகவினர் போராட்டம், சாலை மறியல்: கூட்டணி கட்சிகளால் குழப்பமா?
அதிமுக கூட்டணியில் பல முக்கியமான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால் அதிமுகவிற்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
இதனால் கூட்டணி மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்றன.
இதற்கிடையில், நேற்று அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக போட்டியிடம் தொகுதிகளையும் அதிமுக வெளியிட்டது. நேற்று பாஜக, பாமக போட்டியிடம் தொகுதி வெளியானதும் சில அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதியை அதிமுக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்த்த தொகுதியை தங்களுக்கு ஒதுக்காமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், ஆலங்குடி, பல்லடம் , கே.வி குப்பம், விருத்தாசலம் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கக்கூடாது என கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.