அதிமுகவில் சீட் இல்லை: சுயேட்சையாக களம் இறங்கும் அதிமுக எம்.எல்.ஏ
அதிமுக வேட்பாளர் பட்டியலில் நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பல எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஈரோடு பெருந்துறை தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளவர் தோப்பு வெங்கடாசலம். இவர் வருவாய்த்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என பல பதவிகளையும் வகித்துள்ளார்.
2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் பெருந்துறை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் ஜெயக்குமார் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வேலை செய்தவர்.
இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் தற்போதைய அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு எதிராக களத்தில் போட்டியிட்டவர் என்றும் தோப்பு வெங்கடாசலம் குற்றம்சாட்டியிருந்தார்.