அலுவலக சாவி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிற்கு அளித்ததற்கு எதிராக ஒபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதிமுக அலுவலகம்
அதிமுக பொது குழு கூட்டம் கடந்த மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே கூட்டத்தை புறக்கணித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முகாமிட்டார். அப்போது ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
சாவி ஈபிஎஸ் வசம்
இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்து உத்தரவிட்டனர். இது குறித்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தனித்தனியே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
ஓபிஎஸ் மேல்முறையீடு
இம்மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், ஒரு மாத காலத்திற்கு தொண்டர்கள் நிர்வாகிகள் யாரும் கட்சியின் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.