ஒரே நேரத்தில் 6 பேரை கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக - நடந்தது என்ன?

people partry edappadi aiadmk
By Jon Mar 30, 2021 12:04 PM GMT
Report

 அதிமுகவிலிருந்து திடீரென 6 பேரை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் உள்ளவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஒரு சிலர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

இதன்பின் அதிமுக அவர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியது. இதுபோல் கட்சிக்குள் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுபவர்கள் மீது ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில், தற்போது ஒரே நேரத்தில் அதிமுகவில் இருந்து 6 பேரை முதல்வரும், துணை முதல்வரும் நீக்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கழக கொள்கை, குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டாலோ, கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவித்தாலோ கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்.

இதனையடுத்து, வரும் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து தேர்தலில் பணியாற்றிய காரணத்தினால் இன்று முதல் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வி.ஏழுமலை, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் சேர்ந்த ஈஸ்வரி ஈஸ்வரசாமி, எ.நாகராஜன், எம்.ரங்கசாமி, கே.கமல்ஹாசன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கே.ஸ்ரீதர் ஆகிய 6 ஆகிய பேரும் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள் என்றும் இவர்களுடன் கழக தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.