வளர்ப்பு நாய் வச்சுருக்கீங்களா? மாநகராட்சி முக்கிய எச்சரிக்கை!
நாய் வளர்ப்பு குறித்து சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாய் வளர்ப்பு
சென்னையில் சுமார் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாகவும், 2024-ம் ஆண்டில் மட்டும் 14,000 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த கருணாகரன்(வயது 48) என்பவரை, பக்கத்து வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களை வைத்திருப்போருக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்கக் கூடாது என்றும்,
மாநகராட்சி எச்சரிக்கை
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிமம் பெற்ற, நோய் தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்கு செல்லும்போது ஒரே நேரத்தில் ஒரு செல்ல பிராணியை மட்டுமே உரிமையாளர் கொண்டு வர வேண்டும் என்றும், பொது இடங்களில் கழுத்துப்பட்டை, முகமூடி அணியாமல் நாய்களை கொண்டு வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.