தேர்தல் பத்திரம்: சிஎஸ்கே சார்பில் அதிமுகவுக்கு நன்கொடை - எத்தனை கோடி தெரியுமா?
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுகவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ரூ.5 கோடி நன்கொடை வழங்கி உள்ள விபரம் வெளியாகி உள்ளது.
தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை கடந்த 2018-ல் பாஜக அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க விரும்புபவர்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணத்தை தேர்தல் பத்திரங்களாக மாற்றி கொடுக்கலாம்.
இதில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் விபரம் வெளியே தெரியாது. இதனிடையே தேர்தல் பத்திரம் திட்டம் சட்டத்துக்கு முரணானது என அத்திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டதோடு, அதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது. இதையடுத்து எஸ்பிஐ அளித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
சிஎஸ்கே நன்கொடை
ஆனால் தேர்தல் பத்திரத்தின் எண் இல்லாத நிலையில் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கியது என்பது தெரியவில்லை. இதையடுத்து எஸ்பிஐயின் செயலை கண்டித்த உச்சநீதிமன்றம், நாளைக்குள் அதுபற்றி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே எஸ்பிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தரவுகளின் விபரம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தரவுகள் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் எந்தெந்த கட்சிகளுக்கு யாரிடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி அதிமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6 கோடியை திரட்டிய நிலையில், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் மட்டும் ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ள விபரம் வெளியாகியுள்ளது.