ஆர்சிபி அணி விற்பனை; கோலிதான் காரணமே.. ரெடியாகும் அதானி
ஆர்சிபி அணியை வாங்குவதற்கு அதானி ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்சிபி அணி விற்பனை
ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது. தொடர்ந்து பெங்களூரில் நடந்த கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பல்வேறு விசாரணை நடந்து வரும் நிலையில், ஆர்சிபி அணியை விற்பனை செய்ய அந்த அணியின் உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த அணி பிரிட்டனைச் சேர்ந்த யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் வசம் உள்ளது.
அதானி ஆர்வம்
ஒவ்வொரு ஆண்டும் ரூ.150 கோடி ஸ்பான்சர் வருவாயை விராட் கோலி மூலமாக ஆர்சிபி அணி பெற்று வருகிறது. இதற்கிடையில் கோலி டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இன்னும் 2 சீசன்களில் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகுவார் என்று கூறப்படுகிறது.
இதனால் ஆர்சிபி அணியை விற்க முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ரூ.17 ஆயிரம் கோடியை ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் பங்குகள் விற்பனைக்கு வந்தால், அதனை வாங்குவதற்கு கவுதம் அதானி ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி நிறுவனம் ஏற்கனவே டபிள்யூபிஎல், ஐஎல்டி20 ஆகிய லீக்குகளில் அணிகளை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.