நிவாரணத்துக்கு கூட நீதிமன்றம்; நீதி தான் நமக்கு நாதி என்றாகி விட்டது- கமல் குற்றச்சாட்டு!
நிவாரண நிதிக்காக கூட நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல் குற்றச்சாட்டு
இந்தாண்டின் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன். இதையடுத்து, திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு, திருச்சி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கமல் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரையாற்ற புதுச்சேரிக்கு வருகை தந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், நானும் மக்களில் ஒருவன் என்பதால், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற எனது மனநிலை தான் மக்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.
நீதி தான் நாதி
இப்போது நாட்டில் மாற்றம் வர வேண்டும் என்பது முக்கியம் அல்ல. நம்முடைய குடியுரிமை முதற்கொண்டு அனைத்தையும் தற்காத்துக் கொள்ளும் நேரம் இது. அதனால் தான் கட்சி என்ற வரையறை கோடு எல்லாம் கடந்து வந்து இருக்கிறேன்.
வெள்ள நிவாரண நிதிக்காக கூட நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. நீதி தான் நமக்கு நாதி என்றாகி விட்டது. ஜனநாயக நாட்டில் அப்படி இருக்கக் கூடாது. ஒவ்வொரு விஷயங்களும் ஜனநாயகமாகவே நீடிக்க வேண்டும்.
அதற்கான முதற்கட்ட முயற்சியாக இந்த தேர்தலைப் பார்க்கிறேன். இதுவரையில் எனது ரசிகர்கள் நற்பணி செய்து கொண்டிருந்தீர்கள். இனி நாட்டுப் பணி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.