திமுக கூட்டணியில் குழப்பம்.. ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் முடிவு!
ஆதவ் அர்ஜுனா கூட்டணியில் குழப்பம் ஏற்படும் வகையில் நடக்கிறார் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
திருமாவளவன்
அம்பேத்கர் நினைவு நாளான இன்று (06.12.2024) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்,
அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தின் முதல் பிரதியை தவெக தலைவர் விஜய் வெளியிட, ஆனந்த் டெல்டும்டெ பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், திருமாவளவன் மனது இங்கே தான் இருக்கிறது என்று விஜய் பேசியது அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியிட்டது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது. அந்த நிகழ்வில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணம் என்பது போன்ற கருத்தை விஜய் பதிவு செய்துள்ளார்.
அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்குவதற்கு நானோ, விடுதலை சிறுத்தைகளோ பலவீனமாக இல்லை.
இந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ளாமல் போனதற்கு விஜய் காரணம் இல்லை, அவருக்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் எங்கள் இருவரையும் வைத்து, இந்நிக்ழ்ச்சி அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத சூழலிலேயே அரசியல் சாயம் பூசியவர்கள் யார்,
ஆதவ் அர்ஜுனா
அதற்கு என்ன பின்னணி என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கால் நூற்றாண்டு காலமாக தேர்தல் அரசியலில் இருக்கிறோம். எனவே யார் எதற்காக பேசுகிறார்கள் என்ன பின்னணியில் இயங்குகிறார்கள் என்பதை எங்களால் யூகிக்க முடியும்.
அந்த வகையில் தான் இந்த நிகழ்வை அரசியலாக்கிவிடுவார்கள் என்பதை அறிந்து தான் நானே முன்கூட்டியே விகடன் பதிப்பகத்தாரிடம் விளக்கம் கூறிவிட்டேன். நான் சுதந்திரமாக, நல்லெண்ணத்தில் எடுத்த முடிவு அது” என்றார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா குறித்து பேசிய அவர், “விசிகவின் துணை பொதுச் செயலாளராக இருந்தாலும் அவர் சொல்லியிருக்கிற கருத்து அவரது சொந்த கருத்து. கட்சி கருத்தல்ல. வாய்ஸ் ஆஃப் காமன் என்ற நிறுவனத்தின் சார்பில் தான் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும். அதன் பின்னர் இயக்க முன்னணி தோழர்களிடம் இது குறித்து கலந்து பேசுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
அந்த சமயம், கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவராக அவர் இருக்கிறாரா என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, திருமாவளவன் சிரித்தபடியே கைகூப்பி கும்பிட்டு அங்கிருந்து புறபட்டுவிட்டார்.