கதறிய அபிராமி; மறுத்த அரசு தரப்பு, சாகும் வரை சிறை - தகாத உறவின் கொடூரம்!
தகாத உறவுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய், ஆண் நண்பருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தகாத உறவு
குன்றத்தூர், மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(30). இவர் தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி அபிராமி(25). இவர்களுக்கு அஜய்(7) என்ற மகனும் கார்னிகா(4) என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில், அபிராமிக்கும் அருகாமையில் உள்ள பிரியாணி கடை ஊழியர் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த அபிராமி வீட்டார் அவரை கண்டித்தனர். இதில் ஆத்திரமடைந்த அபிராமி விஜய் மற்றும் 2 குழந்தைகளுக்கும் உணவில் தூக்க மாத்திரைகளை அதிகமாகக் கலந்து கொடுத்துள்ளார்.
தாய்க்கு சாகும்வரை சிறை
இதில் குழந்தை கார்னிகா உயிரிழந்தார். விஜய்க்கு எந்த பாதிப்புமின்றி அலுவலகத்துக்குச் சென்று விட்டார். பின், குழந்தை அஜய்யின் கழுத்தை நெரித்து அபிராமி கொலை செய்துள்ளார். தொடர்ந்து அபிராமியும், மீனாட்சி சுந்தமும் தப்பிவிட்டனர். மாலையில் வீடு திரும்பிய விஜய், குழந்தைகள் இருவரும் இறந்து கிடப்பதைப் பார்த்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
செல்போன் சிக்னலை வைத்து அபிராமியையும், மீனாட்சி சுந்தரத்தையும் பிடித்து விசாரித்தனர். அப்போது குழந்தைகளைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி ப.உ.செம்மல், ‘‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று நீதிமன்றம் செயல்பட முடியாது. அதேநேரம், இவர்களின் கொடுங்குற்றத்தை மன்னிக்கவும் முடியாது. ஆயுள் தண்டனை என்பது இவர்கள் செய்த குற்றத்துக்கு குறைவானது என்பதால் சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்’’ என தீர்ப்பளித்துள்ளார். இதனை கேட்டதும் நீதிமன்றத்தில் அபிராமி கதறி அழுதுள்ளார்.