இந்திய அணியில் இது தப்பா இருக்கு; அவரை எடுத்துருக்கணும் - ஆரோன் பின்ச் கருத்து!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் பேசியுள்ளார்.
இந்திய அணி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது.
இதில் ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்று வீரர்களாக சுப்மான் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் பேசியுள்ளார்.
ஆரோன் பின்ச்
அவர் கூறியதாவது "4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நானாக இருந்தால் ரிங்குவுடன் 2 ஸ்பின்னர்களை மட்டுமே தேர்ந்தெடுத்திருப்பேன். எனது ஆரம்பகட்ட தேர்வில் ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளரை தேர்ந்தெடுத்திருந்தேன்.
ஏனெனில் பும்ராவை தவிர்த்து பவர்பிளே ஓவர்களில் யாருமே தொடர்ச்சியாக அசத்துவதில்லை. இந்திய அணி 3 ஸ்பின்னர்களை வைத்து விளையாட விரும்பினால் அதில் ஒருவர் பவர் பிளேவில் பந்து வீசுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
இருப்பினும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 4 ஸ்பின்னர்கள் அதை யாரும் தொடர்ச்சியாக செய்வதாக எனக்குத் தெரியவில்லை. எனவே இந்திய அணி தங்களுக்குத் தாங்களே ஆதரவு கொடுத்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.