கழிவு நீரை வைத்து பீர்-ஆக மாற்றிய நிறுவனம் - இப்படி ஒரு கண்டுபிடிப்பா?
தனியார் நிறுவனம் ஒன்று வீணாகும் நீரை வைத்து மதுபானமாக மாற்றி புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கண்டுபிடிப்பு
அமெரிக்காவில், Epic Cleantec என்ற நிறுவனம் 40 மாடி கட்டடம் ஒன்றில் உள்ள ஷவர், வாஷிங் மெஷின் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீரை பீராக மாற்றியுள்ளது. உலகளவில் கிட்டத்தட்ட 4 சதவீதம் தண்ணீர் பிற தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு, அது வீணாகிறது.
அதனால் இந்த அந்த நிறுவனம் Devil's Canyon Brewing Co நிறுவனத்துடன் இணைந்து ஆன்சைட் கிரே வாட்டர் ரீயூஸ் சிஸ்டத்தை பயன்படுத்தி வீணாகும் நீரை வைத்து பீர் தயாரித்துள்ளது. இவர்கள் வீணாகும் நீரை சேகரித்து அதனை வடிகட்டி கிருமி நீக்கம் செய்து அதனை பீராக மாற்றியுள்ளனர்.
குடிநீரை விட பாதுகாப்பானது
இந்நிலையில், அந்த நிறுவனத்தின் CEO கூறுகையில், "7570 லிட்டர் கழிவு நீரை பயன்படுத்தி 7 ஆயிரம் பீர் கேன்கள் தயாரித்துள்ளோம். இது விற்பனைக்காக அல்லாமல், ஒரு கல்வி சார்ந்த முயற்சியாகவே இதனை கருதுகிறோம்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து, இந்த மறுசுழற்சி சிஸ்டம் மூலமாக ஒரு நாளைக்கு 28 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியும்.
அதுவே ஒரு வருடத்திற்கு 94,63,529 லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்யலாம், அதாவது இது 1.9 கோடி பாட்டில் தண்ணீருக்கு சமம் என்று கூறியுள்ளனர். மேலும், இந்த பீர் திட்டம் 2022-ல் தொடங்கப்பட்டது, இந்த பீர் குடிநீரைக் காட்டிலும் அதிக பாதுகாப்பானது என்றும் ஆரான் டார்டாகோவ்ஸ்கை கூறுகிறார். இவர்களது இந்த புதிய கண்டுபிடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.