அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர 'தீ' விபத்து.. 8 பேர் பலி - நடந்தது என்ன?
பிலிப்பைன்ஸ் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடியிருப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா அருகே உள்ள கியூசான் நகரின் பரங்கே சான் இசிட்ரோ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ரூத் கேபிலி என்பவருக்குச் சொந்தமான மூன்று மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு 2:02 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி மரத்தால் கட்டமைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.குடியிருப்பிலிருந்தவர்கள் தூக்கத்திலிருந்ததால் தீப்பற்றியதை உடனடியாக உணரவில்லை. இதனால் தீ வேகமாகப் பரவிய நிலையில், எழுந்து வெளியேறுவதற்குள் கட்டிடம் முழுவதும் தீ சூழ்ந்துவிட்டது.
தீ விபத்து
இதனால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
மூன்று தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் 6 பேரின் உடல்களும், தரைதளத்தில் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதனையடுத்து அவர்களின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.