ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி; பலர் காயம் - இதுதான் காரணம்
நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூட்ட நெரிசல்
மஹாராஷ்டிரா, மத்திய புறநகர் பகுதியான கல்யான் பகுதியில் இருந்து சி.எஸ்.டி.நோக்கி வந்த புறநகர் ரயிலில் பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.
ரயில் திவா மற்றும் மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது ரயிலில் வாசலில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவறி கீழே விழுந்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.
உடனே ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீழே விழுந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 பேர் பலி
ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக, தொங்கியபடி பயணம் செய்தவர்கள் தண்டவாளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மும்பை புறநகர் ரயில் நிலையத்திற்காக உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவு மூடும் வசதிகள் இருக்கும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, கதவு மூடும் வசதி ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.