'உளவாளியால் கொலை' - ரூ.400 கோடி கேட்டு அம்பானிக்கு 3வது கொலை மிரட்டல் - பரபரப்பு!

India Mukesh Dhirubhai Ambani Mumbai
By Jiyath Oct 31, 2023 11:36 AM GMT
Report

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது 

தொடர் கொலை மிரட்டில்

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராகவும், இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரராகவும் இருப்பவர் முகேஷ் அம்பானி. கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மின்னஞ்சலில் முதல் மிரட்டல் வந்தது. அதில் ரூ.20 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக காம்தேவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இதனையடுத்து சனிக்கிழமையன்று ரூ.200 கோடி கேட்டு மீண்டும் மிரட்டல் வந்தது. அதில் '200 கோடி ரூபாய் கொடுக்கவில்லையெனில் உனது மரண சாசனத்தில் கையெழுத்திடப்படும்' என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. 

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு  

இந்த மிரட்டல்களை தொடர்ந்து அம்பானிக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.400 கோடி கேட்டு மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது.

அதில் "எவ்வளவு பாதுகாப்பு இருக்கிறது என்பது முக்கியமல்ல. எங்களது ஒரு உளவாளியால் கொலை செய்ய முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை மின்னஞ்சல் பெல்ஜியத்தில் இருந்து வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மும்பை சைபர் பிரிவு போலீஸார் பெல்ஜியம் நாட்டிற்கு கடிதம் எழுதி மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்த விபரங்களை கேட்டுள்ளனர்.

இந்த தொடர் மிரட்டல்களால் மும்பை அல்டமண்ட் சாலையில் உள்ள அம்பானியின் இல்லத்திற்கும், அம்பானி குடும்பத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவேண்டாம் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.