உணவின்றி தவிக்கும் 22 லட்சம் பேர்; எமனாக மாறிய இயற்கை - ஐநா கவலை!
லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவிப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
உணவின்றி தவிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதோடு, ஐ.நாவின் தங்குமிடங்களிலும், தற்காலிக தங்குமிடங்கள் அமைத்தும் தங்கள் நாட்களை கடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், 45 நாட்களாக குண்டு மழையை மட்டுமே பார்த்து வந்த காசாவில் திடீரென அடைமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா கவலை
தொடர்ந்து, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் மழை நீரை சேகரித்து குடிநீராக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தற்போது அங்கு 22 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது.
மக்கள் உணவு, எரிபொருள் இன்றி தவிப்பதாகவும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஐநா. உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஒரே நாளில் 20,000 கேலன்கள் எரிபொருள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. 50 லாரிகளில் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளது.