2000 ரூபாய் நோட்டுகளால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு? - ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்!
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது, இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள்
இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்துவந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதனை மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30-ம் தேதிவரை கால அவகாசமும் கொடுத்துள்ளது. ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் குறிப்பில், "ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 24(1)-ன் கீழ் 2016 நவம்பரில் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதன் முதன்மை நோக்கம் அப்போது புழக்கத்திலிருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டப் பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதாகும்.
மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறியது. அதனால், 2018-19-ல், 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது"
செய்திக்குறிப்பு
இதனை தொடர்ந்து, "2,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் 2017 மார்ச் மாதத்துக்கு முன்பு சுமார் 89% அச்சிட்டு வெளியிடப்பட்டன.
2018-ல் புழக்கத்திலுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, ரூ.6.73 லட்சம் கோடியாக இருந்தது, இந்த நோட்டுகளில் 37.3% மட்டுமே புழக்கத்தில் இருந்தது.
மேலும், 2023 மார்ச் 31 அன்று ரூ.3.62 லட்சம் கோடியாக அது குறைந்திருக்கிறது, இதில் புழக்கத்திலுள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே ஆகும்.
இந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் பொதுவாக பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதில்லை. மேலும், பொதுமக்களின் நாணயத் தேவையைப் பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது.
எனவே, இந்திய ரிசர்வ் வங்கியின் க்ளீன் நோட்டு கொள்கையின்படி, ரூ.2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெற முடிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.
இதனால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்று தெரிகிறது.