பத்திரிக்கையாளர் ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
ஆல்ட் நியூஸ் தளத்தின் இணை நிறுவனரும், பத்திரிக்கையாளருமான முகமது ஜுபைருக்கு 5 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
கைது நடவடிக்கை
2018-ம் ஆண்டு முகமது ஜுபைர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜீ 1983-ல் இயக்கிய `கிசி சே நா கேஹ்னா’ திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்றைப் பகிர்ந்து கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் அந்த பதிவு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி அளித்த மனுவை டெல்லி நீதிமன்றம் கடந்த 2-ம் தேதி நிராகரித்தது. பின்னர், உச்சநீதிமன்றத்தை ஜுபைர் அனுகினார்.
நிபந்தனை ஜாமீன்
இந்நிலையில், இன்று அந்த மனுவின் மீது நடந்த விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. புதிதாக அவர் ட்விட்டர் தளத்தில் எதுவும் பதிவிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் அவருக்கு 5 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.