வேலையை விட்டுட்டு போயிடுங்க - அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஜிம்பாப்வே அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் முதல், இரண்டாம் மற்றும் 3வது என வகை வகையாக தாக்குதலை நடத்தி வரும் கொரோனா தொற்று தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நன்றாகவே எடுத்துரைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாடானது தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொண்டு வருகிறது.
அங்கு இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி நோய்த்தொற்று புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால் ஜிம்பாப்வேயில் நடப்பாண்டின் இறுதிக்குள் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கு பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தகுதியுடைய 12 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட சீனாவில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவை முற்றிலும் விரட்டி அடிக்கும் முயற்சியாக தடுப்பூசி விவகாரத்தில் அந்நாட்டு அரசு கெடுபிடி காட்டத் தொடங்கியுள்ளது. அதன்படி தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை.
அதேசமயம் மற்றவர்களின் நலனுக்காக அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் விருப்பம். ஒருவேளை தடுப்பூசி செலுத்துவதும், செலுத்தாததும் எங்கள் விருப்பம் என்று பேசினால் நீங்கள் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்வதே நல்லது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.