ஜிம்பாப்வே நாட்டில் பரவும் கொடூர நோய்…150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி - அதிர்ச்சி தகவல்
ஜிம்பாப்வே நாட்டில் தற்போது பரவி வரும் தட்டம்மை நோய்க்கு 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தட்டம்மை நோய்
தட்டம்மை நோய் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் தட்டம்மை நோய் பரவத்தொடங்கியது.
அந்நாட்டில் இதுவரை இந்நோயால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 150க்கு மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
குழந்தைகள் மரணம்
தட்டம்மை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பார்வை இழப்பு , மூளை வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இந்நோயால் தாக்கப்பட்ட குழந்தைகள் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து மரணம் அடைந்து வருகின்றனர்.
அரசு நடவடிக்கை
அந்நாட்டில் மத நம்பிக்கையால் இதுவரைக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தவில்லை. இதுவே குழந்தைகளின் அதிகளவு இறப்பிற்கு காரணம் என்ற மருத்துவ தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தற்போது 6 மாதம் முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.