பாகிஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே.
ஜிம்பாப்வே Vs பாகிஸ்தான்
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 24வது போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின.
ஆஸ்திரேலியின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்களில், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி பெரிதாக ரன்னும் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சியான் வில்லியம்ஸ் 31 ரன்களும், கிராய்க் எர்வீன் 19 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளையும், ஷாதப் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
திணறிய பாகிஸ்தான் அணி
இதனையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை விட பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டது.
கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் சான் மசூத் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஜிம்பாப்வே த்ரில் வெற்றி
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை மிக வீசிய ஜிம்பாப்வே அணியின் பிராட் எவான்ஸ் முதல் மூன்று பந்துகளில் 8 ரன்கள் விட்டுகொடுத்தாலும், நான்காவது பந்தை டாட் பாலாகவும், ஐந்தாவது பந்தில் விக்கெட்டும் வீழ்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இதன் மூலம் கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை சந்தித்த பாகிஸ்தான் அணி, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்துவிட்டு, இரண்டாவது ரன் ஓடும் போது ஷாகின் அப்ரிடி விக்கெட்டை இழந்ததால் ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரசா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் பிராட் எவான்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில், பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றான பாகிஸ்தான் அணியை 130 ரன்கள் கூட எடுக்கவிடாமல் கட்டுப்படுத்தி ஜிம்பாப்வே அணி பெற்ற வெற்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பிரமிக்க வைத்துள்ளது.