உக்ரைன் போரில் திடீர் திருப்பம் - புதினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஜெலன்ஸ்கி
ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்த உக்ரைனின் முடிவு, தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனும் பதில் தாக்குதல் கொடுப்பதால் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையே சுமார் 30 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் போரை நிறுத்த உலக நாடுகள் ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் ரஷ்ய படைகள் மீண்டும் ஹைபர்சோனிக் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், இதில் எரிபொருள் கிடங்கு அழிக்கப்பட்டு இருப்பதாகவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் 115 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் அறிவித்துள்ளார். ஆனால், இம்முறை பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் அது மூன்றாம் உலகப்போரை குறிக்கும் என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.