ரஷ்ய தாக்குதலால் உக்ரைனை சேர்ந்த் 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் - அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் 97 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது.
அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதே சமயம், ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலின் வேகத்தை அதிகப்படுத்தி வருகிறது. அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷ்ய படைகள் தொடர்ந்து கொடூர தாக்குதல் நடத்தி கைப்பற்றி வருகிறது.
வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தியதில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், கனடா நாடாளுமன்றத்தில், அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார்.
அப்போது உக்ரைனுக்கு கனடா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி கூறிய அவர், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் மனிதாபிமானமற்றது என குற்றம்சாட்டினார்.
மேலும், ரஷ்யாவின் அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டார்.