தந்தையை இழந்த கிரிக்கெட் வீரர்: சேவாக், யுவராஜ் சிங் ஆறுதல்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானதையடுத்து சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியில் ரிங்கு சிங் (Rinku Singh) விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை கான்சந்த் சிங், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் வீரரான விரேந்தர் சேவாக் (Virender Sehwag), "ரிங்கு, உங்களது தந்தையின் மறைவைப் பற்றிக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உங்கள் தந்தை பல தியாகங்கள் மூலம் உண்மையிலேயே வலிமையான மற்றும் அற்புதமான மகனை வளர்த்தார், அதுவே அவரது மிகப்பெரிய மரபு. உங்களுடனும், உங்கள் குடும்பத்தினருடனும் எனது பிரார்த்தனைகளும், எண்ணங்களும் உள்ளன. ஓம் சாந்தி" என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் யுவராஜ் சிங் (Yuvraj Singh) தனது பதிவில், "ரிங்குவின் தந்தையின் மறைவைக் கேட்டது இதயத்தை உடைக்கும் செய்தி. இது போன்ற தருணங்களில், வார்த்தைகள் போதாது. இந்த கடினமான நேரத்தில் உங்களுடனும், உங்கள் குடும்பத்தினருடனும் ஒற்றுமையாக நிற்போம். உங்களைச் சுற்றியுள்ள அன்பில் நீங்கள் வலிமையையும், தைரியத்தையும் காண வேண்டும்" என கூறியுள்ளார்.
