ஆந்திராவில் என்.டி.ஆர் சிலையை உடைக்க முயற்சி - ஆளும்கட்சி நபரால் வெடித்த சர்ச்சை

YSRcongress NTR statue
By Petchi Avudaiappan Jan 04, 2022 12:25 AM GMT
Report

ஆந்திராவில் என்டிஆர் சிலையை உடைக்க முயற்சி செய்ததாக ஆளும் கட்சிப் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள துர்க்கியில் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் சிலை உள்ளது. அந்த சிலையை நேற்று மாலை ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மகன் கோட்டீஸ்வர ராவ் சம்மட்டியால் அடித்து உடைக்க முயன்றார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ தொடங்கிய நிலையில் இந்த செயலுக்கு  என்.டி.ராமராவ் குடும்பத்தினர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சியினர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலை உடைக்க நடைபெற்ற முயற்சியை கண்டித்து குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனிடையே என்.டி.ஆர் சிலை மீதான தாக்குதல் உலகம் முழுவதிலும் உள்ள ஆந்திர மக்கள் உணர்வுகளை காயப்படுத்தியிருக்கிறது என  முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.